ஜகார்த்தா
இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை எதிர்த்து விளையாடினார்.
ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தொடரில் சிந்து 22-20, 21-23, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் சிந்து, போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சிவோங்குடன் மோதுகிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், உலகின் 2-ம் நிலை வீரரான சீனாவின் ஷி யுகியுடன் மோதினார். இதில் லக்சயா சென் 11-21, 22-20, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 65 நிமிடங்கள் நடைபெற்றது.
மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரனாய் 17-21, 18-21 என்ற செட் கணக்கில் போராடி இந்தோனேஷியாவின் ஆல்வி பர்ஹானிடம் தோல்வி அடைந்தார்.