RCB

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் பஞ்சாப் – ஆர்சிபி மல்லுக்கட்டல்

முலான்பூர்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 19 புள்ளிகளை குவித்து முதலிடத்துடன் நிறைவு செய்திருந்தது. அந்த அணி 2014-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றில் விளையாடுகிறது.

ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 19 புள்ளிகளை பெற்ற போதிலும் லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்தது. ஏனெனில் பஞ்சாப் அணியின் நிகர ரன் விகிதம் 0.372 ஆகவும், பெங்களூரு அணியின் நிகர ரன் விகிதம் 0.301 ஆகவும் இருந்தது.

நடப்பு சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்யேரஸ் ஐயர், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகியோரது கூட்டணி அணிக்கு சிறந்த முடிவுகளை கொடுத்துள்ளது. தொடக்க பேட்டிங்கில் பிரப்சிம்ரன், பிரியன்ஷ் ஆர்யா சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நடுவரிசையில் ஜோஷ் இங்லிஷ், ஸ்ரேயஸ் ஐயர் பலம் சேர்த்து வருகின்றனர்.

பின்வரிசையில் நேஹல் வதேரா, ஷசாங் சிங் ஆகியோர் தங்களது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர்களாக திகழ்கின்றனர். மார்கோ யான்சன் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுவிட்டதால் அவரது இடத்தை அஸ்மதுல்லா ஓமர்ஸாய் நிரப்பக்கூடும். விரல் பகுதியில் காயம் அடைந்ததால் கடைசி இரு லீக் ஆட்டங்களில் விளையாடாத சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சாஹல் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும்.

சுழலில் அவருடன் ஹர்பிரீத் பிராரும் பலம் சேர்க்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் சீரான திறனை வெளிப்படுத்தி வரும் அர்ஷ்தீப் சிங், பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

ஆர்சிபி அணி தனது கடைசி ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் 228 ரன்கள் இலகை துரத்திய பெங்களூரு அணி 8 பந்துகளை மீதம் வைத்து 18.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 230 ரன்கள் குவித்து வெற்றி பெற்று அனைவரையும் வியக்கவைத்தது.

பொறுப்பு கேப்டனான ஜிதேஷ் சர்மா அசாத்தியமான வகையில் மட்டையை சுழற்றி 33 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் விளாசி மிரட்டினார். அவரது அதிரடியின் காரணமாகவே ஆர்சிபி அணி வெற்றி பெற்று லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்ய முடிந்தது. அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

மேலும் தொடக்க பேட்டிங்கில் பில் சால்ட், விராட் கோலி ஜோடி பஞ்சாப் அணியின் பந்துவீச்சு துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என எதிர்பார்கப்படுகிறது. ஹேசில்வுட் வருகை பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கக்கூடும்.

இன்றைய போட்டி நடைபெறும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சீசனில் பஞ்சாப் – ஆர்சிபி அணிகள் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி லீக் ஆட்டத்தில் மோதி இருந்தன. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top