புதுடெல்லி
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஆண்டு தோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில், கடந்த ஜனவரி 25ம் தேதி 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

பத்ம பூஷண் விருது பெற்ற பி.ஆர்.ஸ்ரீஜேஷ்.
இந்நிலையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரா ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, பத்ம ஸ்ரீ விருதை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார். இதேபோன்று இந்திய ஹாக்கி அணியின் லெஜண்டான பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.