சென்னை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 5) பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது.
டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்கில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்தில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் சிஎஸ்கே பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். நடப்பு சீசனில் அவர், ஓவருக்கு சராசரியாக 5.25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் டெல்லி அணியில் டு பிளெஸ்ஸிஸ், ஜேக் பிரேசர் மெக்கர்க், கே.எல்.ராகுல், அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடிடும் திறன் கொண்டவர்கள். பின் வரிசையில் அஷுதோஷ் சர்மா, அக்சர் படேல், விப்ராஜ் நிகாம் ஆகியோர் கைகொடுக்கக்கூடியவர்கள். இதில் அஷுதோஷ் சர்மா, லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 பந்துகளில், 66 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். மேலும் டு பிளெஸ்ஸிஸ் கடந்த காலங்களில் சிஎஸ்கேவுக்காக விளையாடி உள்ளதால் அவர், தனது அனுபவத்தால் அணியில் உள்ள இளம் பேட்ஸ்மேன்களை வழிநடத்தக்கூடும்.