வழக்கம்போல் போராடி தோற்றது ராயல்ஸ் * ஹர்பிரீத் ஆட்ட நாயகன்
ஜெய்பூர்: ஐபிஎல் 18வது சீசன் 59வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதிய பஞ்சாப் கிங்ஸ் 10 ரன் வித்தியாசத்தில் வென்று பிளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்கியது.

சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. முன்னணி வீரர்கள் ஆர்யா 9, மிட்செல் ஓவன் 0, பிரப்சிம்ரன் 21 ரன்னில் (10 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேற, 3.1 ஓவரில் 34 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய பஞ்சாப் அணியை நெஹல் வதேரா – கேப்டன் ஷ்ரேயாஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி நிலை நிறுத்தியது.
இருவரும் 4வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் 30 ரன் (25 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பராக் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் வசம் பிடிபட்டார். அடுத்து வதேரா – ஷஷாங்க் இணைந்து ராயல்ஸ் பந்துவீச்சை பதம் பார்க்க, பஞ்சாப் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடி 33 பந்தில் 58 ரன் சேர்த்தது.
வதேரா 70 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி மத்வால் பந்துவீச்சில் ஹெட்,மயரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஷஷாங்க் சிங் – அஸ்மதுல்லா ஒமர்சாய் அதிரடியில் இறங்கி ராயல்ஸ் பவுலர்களை புரட்டி எடுக்க… பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது.
ஷஷாங்க் 59 ரன் (30 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), அஸ்மதுல்லா 21 ரன்னுடன் (9 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் தேஷ்பாண்டே 2, மபாகா, பராக், மத்வால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பஞ்சாப் அணிக்கு கடைசி 4 ஓவரில் 60 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி இணைந்து துரத்தலை தொடங்கினர். இருவரும் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, ராயல்ஸ் ஸ்கோர் இறக்கை கட்டி பறந்தது.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.4 ஓவரில் 76 ரன் சேர்த்து மிரட்டியபோது ராஜஸ்தான் எளிதில் வெற்றி பெறும் என்றே தோன்றியது. ஆனால், சூர்யவன்ஷி 40 ரன் (15 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஜெய்ஸ்வால் 50 ரன் (25 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹர்பிரீத் பிரார் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, ராயல்ஸ் திணற ஆரம்பித்தது.

கேப்டன் சஞ்சு சாம்சன் 20, பராக் 13 ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர். துருவ் ஜுரெல் – ஹெட்மயர் ஜோடி நம்பிக்கையுடன் போராடியும் ராயல்சுக்கு வெற்றி எட்டாக் கனியாகவே இருந்தது. ஹெட்மயர் 11, ஜுரெல் 53 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), வனிந்து ஹசரங்கா (0) அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து 10 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டைவிட்டது.
ஷுபம் துபே 7, க்வெனா மபாகா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் 4 ஓவரில் 22 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றிய ஹர்பிரீத் பிரார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மார்கோ யான்சென், அஸ்மதுல்லா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ராயல்ஸ் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியதுடன் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.