ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி, அயர்லாந்துடன் மோதியது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குஷால் மெண்டிஸ் 43 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்தார். இறுதிக்கட்ட ஓவர்களில் கமிந்து மெண்டிஸ் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசி அசத்தினார். முன்னதாக தொடக்க வீரர்களான பதும் நிசங்கா 24, கமில் மிஷ்ரா 14 ரன்கள் சேர்த்து வெளியேறினர்.
நடுவரிசையில் பவன் ரத்னாயகே 4, துனித் வெல்லாலகே 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் தசன் ஷகா ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். அயர்லாந்து அணி சார்பில் பார்ரி மெக்கார்த்தி, ஜார்ஜ் டாக்ரெல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
164 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அயர்லாந்து அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. பால் ஸ்டிர்லிங் 6, ராஸ் அடேர் 34, லார்கன் டக்கர் 21 ரன்களில் வெளியேறினர்.
கடைசி 6 ஓவர்களில் வெற்றிக்கு 51 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அப்போது சீராக ரன்கள் சேர்த்து வந்த ஹாரி டெக்டர் 34 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் வனிந்து ஹசரங்கா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் அந்த மளமளவென விக்கெட்களை பறிகொடுத்து 19.5 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கர்திஷ் கேம்பர் 13, பென் கலிட்ஸ் 4, கரேத் டெலானி 0, ஜார்ஜ் டாக்ரெல் 9, மார்க் அடேர் 10, மேத்யூ ஹம்ப்ரேஸ் 0 ரன்களில் பெவிலியன் திரும்பினர். இலங்கை அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்களான வனிந்து ஹசரங்கா, தீக்சனா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளரான பதிரனா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 புள்ளிகளை பெற்றது. கமிந்து மெண்டிஸ் ஆட்ட நாயகனாக தேர்வானார். இலங்கை அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஓமனுடன் வரும் 12ம் தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. அயர்லாந்து தனது 2வது ஆட்டத்தில் வரும் 11ம் தேதி முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
தோல்வி குறித்து அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் கூறும்போது, “160 ரன்கள் துரத்தக்கூடிய ஸ்கோர் என்று நினைத்தோம். ஆனால் இலங்கை 15–20 ரன்கள் கூடுதலாக எடுத்துவிட்டது. இறுதி ஓவர்களில் அவர்களின் அனுபவமே வித்தியாசமாக இருந்தது. நாங்கள் நல்ல நிலைகளில் இருந்தோம், ஆனால் முடிவில் அழுத்தம் அதிகரித்தது.
பீல்டிங்கில் சிறு தவறுகள் ஏற்பட்டன. இந்த தொடரில் ஸ்பின் பெரிய சவாலாக இருக்கும். அடுத்ததாக 2 நாட்களில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளோம். அதற்கு சில விஷயங்களை சரி செய்துகொண்டு வலுவாக மீண்டு வரவேண்டும்” என்றார்.

