ஹராரே
முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து – தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ரீஸா ஹென்ரிக்ஸ் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 41 ரன்களும், லிண்டே 23 ரன்களும், வாண்டர் டஸ்சென் 14 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கோப் டஃபி, ஆடம் மில்னே மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வில்லியம் ஓ’ரூர்க் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து 15.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. டிம் செய்ஃபெர்ட் 48 பந்துகளில், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். டேரில் மிட்செல் 20 ரன்களும், டெவான் கான்வே 19 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் செனுரான் முத்துசாமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

