ரோகித் – சூர்யா மிரட்டல்
மும்பை: சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ரோகித் ஷர்மா – சூர்யகுமார் யாதவ் இணையின் சூப்பர் ஆட்டத்தால் எம்ஐ அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றது.

வாங்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஷேக் ரஷீத், ரச்சின் ரவிந்த்ரா இணைந்து சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். ரச்சின் 5 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளிக்க, ஆயுஷ் மாத்ரே 32 ரன் (15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஷேக் ரஷீத் 19 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.
சென்னை அணி 8 ஓவரில் 63 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ரவீந்திர ஜடேஜா – ஷிவம் துபே ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. மும்பை இந்தியன்சின் துல்லிய தாக்குதலை சமாளித்து ரன் குவிக்க முடியாமல் சற்று திணறிய இருவரும், பின்னர் சுதாரித்துக் கொண்டு வழக்கமாக அதிரடியை வெளிப்படுத்த… சிஎஸ்கே ஸ்கோர் வேகம் எடுத்தது.
இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்தது. துபே 50 ரன் (32 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் தோனி 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது.
ஜடேஜா 53 ரன் (35 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஜேமி ஓவர்ட்டன் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 2, தீபக் சாஹர், அஷ்வனி குமார், மிட்செல் சாண்ட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரியான் ரிக்கெல்டன் – ரோகித் ஷர்மா ஜோடி 6.3 ஓவரில் 63 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது.
ரிக்கெல்டன் 24 ரன் எடுத்து (19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஜடேஜா சுழலில் மாத்ரே வசம் பிடிபட… சிஎஸ்கே தரப்பு உற்சாகமானது. ஆனால், அடுத்து வந்த ஸ்கை ரோகித்துடன் இணைந்து அதிரடியில் இறங்க, மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எக்கச்சக்கமாக எகிறியது.

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் சென்னை பவுலர்கள் விழி பிதுங்கினர். ரோகித் 33 பந்தில் அரை சதம் அடிக்க, மறுமுனையில் சூர்யகுமார் 26 பந்தில் 50 ரன் விளாசி அசத்தினார். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவரிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
ரோகித் 76 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), சூர்யகுமார் 68 ரன்னுடன் (30 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரோகித் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். மும்பை அணி 8 போட்டியில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6வது இடத்துக்கு முன்னேறியது.
அதே சமயம், 8 போட்டியில் 6வது தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே பரிதாபமாக கடைசி இடத்தில் நீடிக்கிறது.