புதுடெல்லி
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 13) டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. 206 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 40 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசி மிரட்டினார். எனினும் அவரது தாக்குதல் ஆட்டத்திற்கு பலன் இல்லாமல் போனது.
போட்டி முடிவடைந்ததும் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும்போது, “ நிச்சயமாக இந்த வெற்றி நிம்மதி அளிக்கிறது. வெற்றி பெறுவது எப்போதும் சிறப்பானது. குறிப்பாக இது போன்ற ஆட்டங்களில் வெற்றி என்பது சிறப்பு வாய்ந்தது. தொடர்ந்து போராட வேண்டும், இதற்கான அர்த்தம் நிறைய உள்ளது. கரண் சர்மா அற்புதமாக பந்துவீசினார். இதுபோன்ற சிறிய மைதானத்தில் அவர், பந்து வீசியவிதம் அபாரமானது.
கருண் நாயருக்கு எதிராக எப்படி, எந்த வகையில் பந்து வீசுவது என தவித்தோம். அவர், எங்கள் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட விதம், அவரது வாய்ப்புகளை எடுத்துக் கொண்ட விதம், திட்டங்களை செயல்படுத்திய விதம் ஆகியவை அவரது கடின உழைப்பைக் காட்டுகிறது. கருண் நாயர் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்” என்றார்.