ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 9 விக்கெட்கள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 5 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், ஷிவம் துபே 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன 50 ரன்களும் சேர்த்தனர்.
அறிமுக வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்தார். தொடக்க வீரர்களான ஷெய்க் ரஷித் 19, ரச்சின் ரவீந்திரா 5, தோனி 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். தீபக் சாஹர், அஸ்வனி குமார், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
177 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 15.4 ஒவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 45 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன 76 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். முன்னதாக தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன் 19 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். மும்பை அணிக்கு இது 4வது வெற்றியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ள மும்பை அணி.
போட்டி முடிவடைந்ததும் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும்போது,“ ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடிய விதத்தை வெளியில் இருந்து பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. ரோஹித் சர்மாவின் பார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அவர் சிறப்பான ஆட்டத்திற்கு வந்துவிட்டால் எதிரணிகள் தோல்வியை சந்திப்பது உறுதி. இதை தற்போது கண்கூடாக பார்த்தோம்.
எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். ஏனெனில் வான்கடே மைதானத்தில் 175 முதல் 180 ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது மிகச் சிறப்பான விஷயம். வரும் ஆட்டங்களிலும் எங்களது சிறப்பான செயல்திறன் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது’‘ என்றார்.