புதுடெல்லி
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன், இலங்கையின் சரித் அசலங்கா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ரியான் ரிக்கெல்டன், கார்பின் போஷ் ஆகியோர் வரும் 26-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்துடன் தாயகம் புறப்பட்டுச் செல்கின்றனர்.
வில் ஜேக்ஸ், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளார். அதேவேளையில் ரியான் ரிக்கெல்டன், கார்பின் போஷ் ஆகியோர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகுவதற்காக தென் ஆப்பிரிக்க அணியுடன் இணைய உள்ளனர்.
இதனால் இந்த 3 வீரர்களுக்கு பதிலாக மும்பை அணி இங்கிலாந்தைச் சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன், இலங்கையின் சரித் அசலங்கா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோ ரூ.5.25 கோடிக்கும், வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்ட் க்ளீசன் ரூ.1 கோடிக்கும், பேட்ஸ்மேனான சரித் அசலங்கா ரூ.75 லட்சத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.