ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி இம்முறை வலுவாக களமிறங்குகிறது. தல தோனி ஃபிட்டாக இருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு காலில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடிய தோனி கேமியோ ரோல் மட்டுமே செய்தார்.
இம்முறை அவர், முழு உடற்தகுதியுடன் இருப்பதால் ரசிகர்களுக்கு ஹெலிகாப்டர் ஷாட் விருந்து காத்திருக்கிறது. கடந்த 2024 சீசனில் சிஎஸ்கே அணியின் ஓபனர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதற்கு இம்முறை சிஎஸ்கே அணி தீர்வுகாணக்கூடும். டாப் ஆர்டரில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். நடுவரிசையில் ஷிவம் துபே தாக்குதல் ஆட்டம் தொடுப்பதில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.

அவருடன் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடும். சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருந்தாலும் சரி, வேகப்பந்துவீச்சுக்கு சாதமாக இருந்தாலும் சரி அதை சமாளிக்க சிஎஸ்கே போதிய வீரர்களை கொண்டுள்ளது.
ஸ்பின்னர்களில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, ஸ்ரேயஸ் கோபால் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். இதில் ஜடேஜா, அஸ்வின் பிரதான ஸ்பின்னர்களாக இருக்கக்கூடும். அஸ்வின் 10 வருடங்களுக்கு பிறகு சிஎஸ்கேவுக்காக களமிறங்குகிறார். இதனால் அவர், மீது எதிர்பார்ப்பு உள்ளது.
பாஸ்ட் பவுலிங்கில் பதிரனா கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடன் வெளிநாட்டு வீரர்களில் சேம் கரண், ஜேமி ஓவர்டன், நேதன் எல்லிஸ் ஆகியோரும் பலம்சேர்க்கக்கூடும்.
இந்திய வீரர்களில் கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, கமலேஷ் நாகர்கோட்டி, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும். இதில் அன்ஷுல் கம்போஜ் உள்ளூர் போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
