இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐஎஸ்எல்) 11 -வது சீசன் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தின் 2-வது லெக்கில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் – ஜாம்ஷெட்பூர் எப்சி மோதின. இதில் மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ஜாசன் கம்மிங்ஸ் 51-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். 90+4-வது நிமிடத்தில் அனிருத் தாபா உதவியுடன் ரால்டே கோல் அடித்து அசத்தினார்.

அரை இறுதியின் முதல் லெக்கில் ஜாம்ஷெட்பூர் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. இரு ஆட்டங்களின் சராசரி அடிப்படையில் மோகன் பகான் அணி 3-2 என்ற கோல் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கால்பதித்தது. வரும் 12-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் இறுதிப் பாட்டியில் மோகன் பகான் அணி, பெங்களூரு எப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு அணி தனது அரை இறுதி ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் கோவா அணியை தோற்கடித்து இருந்தது.