avesh khan

மிட்செல் ஸ்டார்க்காக இருக்க விரும்பவில்லை…. ஆவேஷ் கான் ‘பளிச்’ !

ஜெய்ப்பூர்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், ஆயுஷ் பதோனி 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் விளாசினர்.

ராஜஸ்தான் தரப்பில் வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 181 ரன்கள் இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடி தொடக்கம் கொடுத்தார். அவருடன் மற்றொரு தொடக்க வீரராக 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கி 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 8 ரன்களில் ஷர்துல் தாக்குர் பந்தில் நடையை கட்டினார்.

LSG1
ஆவேஷ் கானை பாராட்டிய லக்னோ கேப்டன் ரிஷப் பந்த்.

தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரியான் பராக், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். 17 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போதுதான் 18-வது ஓவரை வீசிய ஆவேஷ்கான் முதல் பந்தில் ஜெய்ஸ்வாலை (52 பந்துகள், 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள், 74 ரன்கள்) மிடில் ஸ்டெம்ப் சிதற போல்டாக்கினார். இதே ஓவரின் கடைசி பந்தில் ரியான் பராக்கை (26 பந்தகள், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள், 39 ரன்கள்) எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்து மிரட்டினார் ஆவேஷ்கான்.

இந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே ஆவேஷ்கான் வழங்க ராஜஸ்தான் அணியில் பதற்றம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.

பிரின்ஸ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் 11 ரன்கள் சேர்க்கப்பட்டது. களத்தில் ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜூரெல் இருந்த நிலையில் ஆவேஷ்கான் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் இரு பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் 3-வது பந்தை ஷிம்ரன் ஹெட்மயர் (7) ஸ்கொயர் லெக் திசையில் விளாச ஷர்துல் தாக்குல் அற்புதமாக கேட்ச் செய்தார். இதன் பின்னர் 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

இதையடுத்து களமிறங்கிய ஷுபம் துபே 4-வது பந்தை வீணடித்தார். அடுத்த பந்தில் லாங் ஆன் திசையில் ஷுபம் துபே எளிதாக கொடுத்த கேட்ச்சை டேவிட் மில்லர் தவறவிட்டார். இதனால் 2 ரன்கள் சேர்க்கப்பட்டது.

கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷுபம் துபேவால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. துருவ் ஜூரெல் 5 பந்துகளில், 6 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

avesh khan 2

2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.

8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு இது 6-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து முக்கியமான கட்டத்தில் 3 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த ஆவேஷ்கான் ஆட்ட நாயகனாக தேர்வானர். அவர் கூறும்போது, “கையில் ஏற்பட்ட காயம் பரவாயில்லை. முதலில் கை உடைந்துவிட்டது என்றே நினைத்தேன். வெற்றியை கொண்டாட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

யார்க்கர்கள் வீசும் விஷயத்தில் நான் மிட்செல் ஸ்டார்க்காக இருக்க விரும்பவில்லை. நான், அவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன். தெளிவான சிந்தனையுடன் பந்து வீசி எனது நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பினேன்.எனது யார்க்கர்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்பினேன். கடைசி ஓவரை பொறுத்தவரையில் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரிகளை தடுக்க விரும்பினேன்.

பந்து மில்லரிடம் சென்றவுடன் கேட்ச் பிடிக்கப்படும் என்று நான் உறுதியாக இருந்தேன். ஆனால், அவர் தவறவிட்டு விட்டார். தொடர்ந்து கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்பதால் எட்ஜ் எடுத்து பவுண்டரி சென்றுவிடக்கூடாது என்று நினைத்தேன். இதனால் யார்க்கர்களில் கவனம் செலுத்தினேன். அணிக்காக போட்டியை வெல்ல விரும்பினேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top