ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசன் தொடக்க லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதிய நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஃபில் சால்ட் – விராத் கோஹ்லி ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டிக்கு முன்பாக, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமான தொடக்க விழா நடைபெற்றது.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் ரஜத் பத்திதார் முதலில் பந்துவீச முடிவு செய்தார். டி காக், சுனில் நரைன் இணைந்து கொல்கத்தா இன்னிங்சை தொடங்கினர். ஹேசல்வுட் வீசிய முதல் ஓவரிலேயே டி காக் (4 ரன்) விக்கெட்டை பறிகொடுக்க, உள்ளூர் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
எனினும், 2வது விக்கெட்டுக்கு நரைனுடன் இணைந்த கேப்டன் ரகானே அதிரடியில் இறங்க, கேகேஆர் ஸ்கோர் வேகம் எடுத்தது. இந்த ஜோடி 55 பந்தில் 103 ரன் சேர்த்து மிரட்டியது. அரை சதம் விளாசிய ரகானே 56 ரன் (31 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.
சுனில் நரைன் 44 ரன் (26 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி 30 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ரிங்கு சிங் 12 ரன் எடுக்க, ரஸ்ஸல் மற்றும் ராணா சொற்ப ரன்னில் நடையை கட்டினர். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது.
ரமண்தீப் 6, ஸ்பென்சர் ஜான்சன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு பந்துவீச்சில் க்ருணால் பாண்டியா 3, ஜோஷ் ஹேசல்வுட் 2, யஷ் தயாள், ரசிக் சலாம், சுயாஷ் ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. ஃபில் சால்ட், விராத் கோஹ்லி இணைந்து துரத்தலை தொடங்கினர். இருவரும் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிற, பெங்களூரு ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.
யார் போட்டாலும் அடிதான் என்கிற மூடில் சால்ட் சிக்சரும் பவுண்டரியுமாகப் பறக்க விட்டு கேகேஆர் பந்துவீச்சை சிதறடித்தார். ரகானே துருப்புச்சீட்டாக நம்பிய வருண் சக்ரவர்த்தியின் மந்திர சுழலும் சுத்தமாக எடுபடவில்லை. சால்ட் – கோஹ்லி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவரிலேயே 95 ரன் சேர்க்க, ஆர்சிபி வெற்றிப் பாதையில் வீறுநடை போட்டது.
சால்ட் 56 ரன் (31 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வருண் சுழலில் ஜான்சன் வசம் பிடிபட்டார். படிக்கல் 10 ரன் எடுத்து நரைன் பந்துவீச்சில் ரமண்தீப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேகேஆர் அணிக்கு எதிராக 1000 ரன் என்ற மைல்கல்லை எட்டியதுடன் அரைசதமும் அடித்து அசத்தினார் கோஹ்லி.
கேப்டன் ரஜத் பத்திதார் அதிரடியாக 34 ரன் விளாச (16 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), கொல்கத்தாவின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தகர்ந்தது. ஆர்சிபி 16.2 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக் கனியைப் பறித்தது.
கோஹ்லி 59 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), லயம் லிவிங்ஸ்டன் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
நடப்பு சாம்பியன் கேகேஆர் தொடக்க ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்திக்க, ஆர்சிபி 18வது சீசனை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. அந்த அணியின் க்ருணால் பாண்டியா (4-0-29-3) ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 2வது நாளான இன்று டபுள் தமாக்காவாக ஐதராபாத்தில் பிற்பகல் 3.30க்கு தொடங்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இரவு 7.30க்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.