* தலா 1 புள்ளி பகிர்ந்தளிப்பு * பிரப்சிம்ரன், ஆர்யா அதிரடி வீண்
கொல்கத்தா: நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளிடையே நடந்த போட்டி, மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 83 ரன் (49 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), பிரியன்ஷ் ஆர்யா 69 ரன் (35 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), மேக்ஸ்வெல் 7, யான்சென் 3 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.
ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன் என்ற மைல் கல்லை எட்டி பிரப்சிம்ரன் அசத்தினார்.
கேப்டன் ஷ்ரேயாஸ் 25, ஜோஷ் இங்லிஸ் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் வைபவ் அரோரா 2, வருண் சக்ரவர்த்தி, ஆந்த்ரே ரஸ்ஸல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து 20 ஓவரில் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கேகேஆர், 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்த நிலையில் கனமழை கொட்டியதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னரும் மழை நிற்காததால், முடிவு இல்லாத போட்டியாக நடுவர்கள் அறிவிக்க, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. புள்ளி பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் 4வது இடத்துக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7வது இடத்துக்கும் முன்னேறின.

