பெங்களூரு
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. இதையடுத்து கடந்த 4-ம் தேதி அந்த அணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதை காண்பதற்காக சின்னசாமி மைதானத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் ஆர்சிபி வணிக பிரிவுத் தலைவர் நிகில், பாராட்டு விழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனத்தின் மேத்யூ, கிரண் மற்றும் வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஏ.சங்கர், பொருளாளர் இ.எஸ்.ஜெய்ராம் ஆகியோர் கூட்ட நெரிசலுக்கு தார்மீக பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடைசி சில நாட்களுக்கு முன்னதாக யாரும் எதிர்பார்க்காத, பரிதாபமான நிகழ்வு ஏற்பட்டது. இதில் எங்களது பொறுப்பு மிகவும் குறைவானது. எனினும் தார்மீகப் பொறுப்பேற்று பதவியில் இருந்து நாங்கள் விலகுகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.