மும்பை
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தினால் ஐபிஎல் போட்டிகள் ஒருவாரத்துக்கு நிறுத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
18-வது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22 முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு (மே 8) தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 10.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் காரணமாக தரம்சாலா மைதானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து பஞ்சாப், டெல்லி அணி வீரர்களை பாதுகாப்பாக ஹோட்டலுக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள், ஒளிபரப்பு பணியாளர்கள் என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் தரம்சாலா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.
தற்போதைய சூழலில் இவர்கள் அனைவரையும் விமானம் மூலம் மீட்க முடியாது என்பதால், சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் டெல்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 58 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எஞ்சிய ஆட்டங்களை நடைபெறுமா என்பது சந்தேகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டாடா ஐபிஎல் 2025 தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒரு வாரத்திற்கு உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து நிலைமையின் விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு புதிய அட்டவணை மற்றும் போட்டிக்கான இடங்கள் குறித்த கூடுதல் தகவல் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்.
அனைத்து அணிகளின் பிரதிநிதிகள், வீரர்களின் நிலைமை, ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள், ரசிகர்களின் நன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பிசிசிஐ இந்திய ராணுவத்தினர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது.
இந்தச் சவாலான காலக்கட்டத்தில் பிசிசிஐ நாட்டிற்கு ஆதரவாக இருக்கிறது. இந்திய அரசாங்கம், ராணுவத்துடன் துணை நிற்கிறோம். ஆபரேஷன் சிந்தூரில் நாயகர்களாக இருக்கும் ராணுவத்தின் தைரியம், சுயநலமற்ற சேவைக்கு சல்யூட்.
இந்த முக்கியமான கட்டத்தில், பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது. இந்திய அரசு, ஆயுதப்படைகள் மற்றும் நமது நாட்டு மக்களுடன் நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் ஆயுதப்படைகளின் தேவையற்ற ஆக்கிரமிப்புக்கு உறுதியான பதிலடியை வழிநடத்தும் போது, ஆபரேஷன் சிந்தூரின் கீழ் நாட்டைப் பாதுகாத்து வரும் நமது ஆயுதப்படைகளின் துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவைக்கு வணக்கம் செலுத்துகிறோம்.
கிரிக்கெட் தேசிய ஆர்வமாக இருந்தாலும், தேசத்தையும் அதன் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பையும் விட பெரியது எதுவுமில்லை. இந்தியாவைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதில் BCCI உறுதியாக உள்ளது, மேலும் நாட்டின் நலனுக்காக அதன் முடிவுகளை எப்போதும் சீரமைப்போம்.
இவ்வாறு தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.