ஷில்லாங்
2027-ம் ஆண்டுக்கான ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் இந்தியா ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் வங்கதேசம், ஹாங்காங், சிங்கப்பூர் அணிகளும் உள்ளன. ஒவ்வொரு அணியும் உள்நாடு மற்றும் வெளிநாடு பாணியில் இரு முறை மோதும். இந்த வகையில் ஒவ்வொரு அணியும் 6 ஆட்டங்களில் விளையாடும். இதில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தை பிடிக்கும் அணி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் நேற்று மெகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. இதன் இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. முதல் பாதி ஆட்டத்தில் வங்கதேசம் அணி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது. ஆனால் கோல் அடிப்பதற்கான தெளிவான வாய்ப்புகளை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை.
அதேவேளையில் 2-வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. வங்கதேச அணிக்கு தொடர்ச்சியாக இந்திய வீரர்கள் அழுத்தம் கொடுத்த போதிலும் கோல் அடிப்பதற்கான ஒரு சில வாய்ப்புகளை உருவாக்க முடிந்தது. ஆனாலும் அதற்கும் பலன் கிடைக்கவில்லை.
31-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. உடான்டா சிங் தலையால் முட்டிய பந்தை வங்கதேச கோல்கீப்பர் கோல் விழவிடாமல் தடுத்துவிட்டார். 68-வது நிமிடத்தில் இந்திய வீரர் போஸ் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. அடுத்த 5 நிமிடத்தில் பரூக் சவுத்ரி அடித்த ஷாட் விலகிச் சென்றது.
இரு அணிகளும் வரும் 18-ம் தேதி மீண்டும் மோதுகின்றன. இந்த ஆட்டம் வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி ஜூன் 10-ம் தேதி ஹாங் காங்குடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் கவுலூன் நகரில் நடைபெறுகிறது.