T 20 world cup_Strip_2_final

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்

ஆடவருக்கான 10-வது ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் இரு முறை சாம்பியனான இந்தியாவுடன் 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் 2021-ம் ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியா, 2014-ம் ஆண்டு சாம்பியனான இலங்கை ஆகிய அணிகளுடன் அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் உள்ளன.

‘சி’ பிரிவில் தலா இரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் ஸ்காட்லாந்து, நேபாளம், இத்தாலி அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘டி’ பிரிவில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் உள்ளன.

டி 20 உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் இந்தியாவில் உள்ள 5 நகரங்களிலும், இலங்கையில் உள்ள இரு நகரங்களிலும் நடைபெறுகின்றன. இந்தியாவில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன், டெல்லி அருண் ஜேட்லி மைதானம், மும்பை வான்கடே மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானம், எஸ்எஸ்சி கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றிலும் கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்திலும் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஒரு மாத காலம் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. போட்டிகள் லீக், சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் சுற்றுகளாக நடைபெறுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இந்த வகையில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 4 ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்த வகையில் லீக் சுற்றில் இருந்து 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒரு பிரிவில் உள்ள அணி எதிர் பிரிவில் உள்ள 4 அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தும். இதில் புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் தலா முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 2 அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.

லீக் சுற்று இன்று தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் மொத்தம் 40 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்று 22-ம் தேதி தொடங்குகிறது. 12 ஆட்டங்களை கொண்ட இந்த சுற்று மார்ச் 1-ம் தேதி முடிவடைகிறது. அரை இறுதி ஆட்டங்கள் மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி நடைபெறும் மைதானம் முடிவு செய்யப்படவில்லை. இந்த போட்டி அகமதாபாத் அல்லது கொழும்பில் மார்ச் 8-ம் தேதி நடைபெறும்.

தொடக்க நாளான இன்று லீக் சுற்றில் 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. காலை 11 மணிக்கு கொழும்பில் உள்ள எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள மேற்கு இந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்துடன் விளையாடுகிறது.

இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி, அமெரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top