ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அறிமுகமான 2022-ம் ஆண்டு சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று வியக்கவைத்தது குஜராத் டைட்டன்ஸ். அடுத்த சீசனிலும் இறுதிப் போட்டி. ஆனால் 2024-ல் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜம்ப் ஆனதால் ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருக்கு போதிய அனுபவம் இல்லாததால் குஜராத் அணியால் 8-வது இடத்தை பிடிக்க முடிந்தது.

இம்முறை வலுவாக களமிறங்குகிறது குஜராத் டைட்டன்ஸ். ஜாஸ் பட்லர், காகிசோ ரபாடா, கிளென் பிலிப்ஸ், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெரால்டு கோட்ஸி ஆகியோர் அணிக்குள கொண்டுவரப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா இணைந்துள்ளனர். சுழலில் மிரட்ட ரஷித் கானுடன் வாஷிங்டன் சுந்தரும் வந்துள்ளார். ஓபனிங்கில் தொடக்க வீரராக ஷுப்மன் கில்லுடன் ஜாஸ் பட்லர் களமிறங்குவது அசுரபலமாக இருக்கும். பேட்டிங்கில் சாய் சுதர்ஷன், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா மிடில் ஆர்டரில் ஸ்டிராங்க்.

ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஜாஸ் பட்லர் தொடக்க வரிசையில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். கடந்த சீசனில் குஜராத் அணியில் பெரும்பாலான ஆட்டங்களில் தொடக்க பேட்ஸ்மேன்கள் பலம் சேர்க்கவில்லை. இந்த பிரச்சினையை ஜாஸ் பட்லர் அசால்ட்டாக டீல் செய்யக்கூடும். ரூ.10.75 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ரபாடா ஐபிஎல் தொடரில் 80 ஆட்டங்களில் விளையாடி 117 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். நியூஸிலாந்து ஆல்ரவுண்டரான கிளென் பிலிப்ஸ் பின்வரிசையில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளும் திறன் கொண்டவர். சுழற்பந்து வீச்சிலும் கைகொடுக்கக்கூடியவர். இந்த கூட்டணியும், ஜாஸ் பட்லரின் வருகையும் குஜராத் அணிக்கு பலம் கொடுக்குமா? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.