பெக்கன்ஹாம்
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக நேற்று இந்தியா ஏ அணியுடன் இணைந்து இந்திய அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார்கள்.
இந்த போட்டி தொடங்குவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், அவசரமாக இந்தியா புறப்பட்டார். கம்பீரின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே அவர், இந்தியா திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கம்பீர் இல்லாத நிலையில், 4 நாள் பயிற்சி ஆட்டத்தின் பொறுப்பை துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்ஷேட் அணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் உள்ளிட்டோர் உதவியாக இருக்கக்கூடும். தனது வீட்டின் சூழ்நிலை சரியாக அமைந்தால், கம்பீர் ஒரு வாரத்துக்குள் இங்கிலாந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.