பிரிஸ்டல்
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.
பிரிஸ்டல் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 38 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் ஜான்சன் சார்லஸ் 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் சேர்த்தனர்.
ரோவ்மன் பொவல் 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 9 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களும், ரொமாரியோ ஷெப்பர்டு 11 பந்துகளில், 19 ரன்களும் விளாசினர். கடைசி 2 ஓவர்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 47 ரன்கள் குவித்தது. இதில் ஆதில் ரஷித் வீசிய 19-வது ஓவரில் 5 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் விளாசப்பட்டிருந்தது. இதில் 3 சிக்ஸர்கள் ஜேசல் ஹோல்டரும், 2 சிக்ஸர்களை ரொமாரியோ ஷெப்பர்டும் அடித்திருந்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் லூக் வுட் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 197 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 18.3 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜாஸ் பட்லர் 36 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்களும், கேப்டன் ஹாரி புரூக் 20 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் விளாசினர். டாம் பேன்டன் 30, ஜேக்கப் பெத்தேல் 26 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி 21 பந்துகளில் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது போட்டி இன்று (10-ம் தேதி) இரவு 11 மணிக்கு சவுத்தாம்டனில் நடைபெறுகிறது.