MS Dhoni

அப்பாடா… ஜெயிச்சுட்டாங்க சிஎஸ்கே!

தோனி – துபே ஜோடியால் தலை தப்பியது

லக்னோ: ஐபிஎல் 18வது சீசன் 30வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ், கேப்டன் தோனி – ஷிவம் துபே ஜோடியின் அதிரடியால் தொடர்ச்சியாக அரை டஜன் தோல்வி என்ற அவமானத்தில் இருந்து தப்பி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

MS Dhoni

வாஜ்பாய் ஏகனா அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் ஜேமி ஓவர்ட்டன், ஷேக் ரஷீத் இடம் பெற்றனர். எல்எஸ்ஜி தரப்பில் மிட்செல் மார்ஷ் மீண்டும் களமிறங்கினார்.

மார்க்ரம் – மார்ஷ் இணைந்து லக்னோ இன்னிங்சை தொடங்கினர். மார்க்ரம் 6, நிகோலஸ் பூரன் 8 ரன்னில் வெளியேற, லக்னோ 23 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் மார்ஷ் – கேப்டன் ரிஷப் பண்ட் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 50 ரன் சேர்த்தது.

மார்ஷ் 30 ரன் (25 பந்து,2 பவுண்டரி, 2 சிக்சர்), ஆயுஷ் பதோனி 22 ரன் (17 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஜடேஜா சுழலில் விக்கெட்டை பறிகொடுக்க, லக்னோ மீண்டும் சரிவை சந்தித்தது. அப்துல் சமத் 20 ரன் எடுத்து (11 பந்து, 2 சிக்சர்) தோனியால் ரன் அவுட் செய்யப்பட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் பொறுமையாகப் போராடிய ரிஷப் 42 பந்தில் அரை சதம் அடித்தார்.

ரிஷப் 63 ரன் (49 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்),ஷர்துல் தாகூர் 6 ரன் எடுத்து பதிரணா வீசிய கடைசி ஓவரில் பெவிலியன் திரும்ப, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன் குவித்தது.டேவிட் மில்லர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Rishab Pant

நடப்பு தொடரில் எல்எஸ்ஜி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பந்துவீச்சில் ஜடேஜா, பதிரணா தலா 2 விக்கெட், கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நூர் அகமது விக்கெட் சாய்க்காவிட்டாலும், 4 ஓவரில் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து லக்னோ ஸ்கோரை கட்டுப்படுத்த உதவினார்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 167 ரன் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு ஷேக் ரஷீத் – ரச்சின் ரவிந்த்ரா ஜோடி 4.5 ஓவரில் 52 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. ரஷீத் 27, ரச்சின் 37 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7, விஜய் ஷங்கர் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

சென்னை அணி 15 ஓவரில் 111 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ஷிவம் துபேவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி துணிச்சலாக அடித்து விளையாட ஆட்டம் சிஎஸ்கே பக்கம் திரும்பியது. ஆனாலும் கடைசி 2 ஓவரில் 25 ரன் தேவைப்பட்டதால் வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி நிலவியது.

எனினும், ஷர்துல் தாகூர் வீசிய 19வது ஓவரில் சிஎஸ்கே அணிக்கு 20 ரன் கிடைக்க சென்னை ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். சிஎஸ்கே 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. துபே 43 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), தோனி 26 ரன்னுடன் (11 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் பிஷ்னோய் 2, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், மார்க்ரம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தோனி ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர்ச்சியாக 5 தோல்விகளைத் தழுவியிருந்த சிஎஸ்கே மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருந்தாலும், புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை வீணடித்த லக்னோ 4வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top