இந்தியா, ஆஸ்திரேலியாவை வென்றால் போனஸ் புள்ளிகள்.. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி விதிகள் ஒட்டுமொத்தமாக மாறுகிறது
ஐசிசி சார்பில் நடத்தப்படும் 2025-27ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் மாதம் நடக்கும் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் ஆரம்பிக்கின்றன.
இந்த டெஸ்ட் தொடரில் பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்த ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது. அடுத்தமாதம் நடக்கும் ஐசிசி வாரிய கூட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் போனஸ் புள்ளிகள் அறிமுகப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

தற்போது ஒரு அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 12 புள்ளிகள் அளிக்கப்படும். போட்டி வெற்றி, தோல்வியின்றி டையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் 6 புள்ளிகள் அளிக்கப்படும். டிராவில் முடிந்தால் 4 புள்ளிகள் அளிக்கப்படும்.
தற்போது போனஸ் புள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதன்படி இன்னிங்ஸ் வெற்றி பெற்றால் கூடுதல் போனஸ் புள்ளிகள், 100 ரன் அல்லது அதற்கு மேல் ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றால் அதற்கு தனியாக போனஸ் புள்ளிகள் வழங்கப்படும்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக தரவரிசையில் முன்னணியில் உள்ள அணிகளுக்கு எதிரான வெற்றி பெறும் அணிகளுக்கு கூடுதல் போனஸ் புள்ளிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக பெறும் வெற்றிகளுக்கு சரியான புள்ளிகள் கிடைக்கவில்லை என்று பல அணிகள் கருதுகின்றன.
மேலும் சொந்த மண்ணில் விளையாடும் அணிக்கு எதிராக வெளிநாட்டு அணி வெற்றி பெற்றால் அதற்கும் போனஸ் புள்ளிகள் வழங்க முடிவு எடுக்கப்பட உள்ளது. இப்படி எல்லாம் மாற்றம் கொண்டு வந்தால் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பாக மாறும். அடுத்த மாதம் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.