மும்பை
2028-ம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனை 94 போட்டிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதேவேளையில் புதிய அணிகளை சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
2022-ம் ஆண்டு சீசனில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அறிமுகமாகின. இதனால் ஐபிஎல் தொடர் 60 ஆட்டங்களில் இருந்து 74 ஆட்டங்களாக அதிகரித்தது. நடப்பு சீசனில் கூட போட்டிகளின் எண்ணிக்கையை 74-ல் இருந்து 84 ஆக அதிகரிக்கும் திட்டம் இருந்தது.
ஆனால் அட்டவணை திட்டமிடலில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஒரே நாளில் 2 போட்டிகள் அதிகம் நடத்தப்படுவதை ஒளிபரப்பாளர்கள் விரும்பாததால் 84 போட்டிகளை நடத்தும் திட்டம் கைகூடாமல் போனது.
எனினும் எதிர்காலத்தில் ஆட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் ஐபிஎல் நிர்வாகம் உறுதியாக உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் சேர்மன் அருண் துமால் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “ 2028-ம் ஆண்டு சீசனுக்காக தொடங்கும் அடுத்த ஒளிபரப்பாளர்கள் உரிமை ஏலத்தின் போது 94 போட்டிகளாக விரிவுபடுத்துவது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலிக்கும்.
இதுதொடர்பாக ஐசிசி-யிடம் ஆலோசித்து வருகிறோம். மேலும் இருதரப்பு தொடர்கள், ஐசிசி தொடர்கள், தொழில்முறை டி 20 கிரிக்கெட் தொடர்கள் தொடர்பாக ரசிகர்களின் ஆர்வம் எவ்வாறு மாறுகிறது என்பதை பற்றி தீவிரமாக பேச வேண்டும்.
நாங்கள் போட்டியை நடத்துவதற்கான அட்டவணையை அதிகரிக்க விரும்புகிறோம். ஒரு கட்டத்தில் 84 அல்லது 94 வரை செல்லலாம். இந்த வகையில் ஒவ்வொரு அணியும் ஹோம் மற்றும் அவே பார்மட்டில் விளையாட வேண்டும். இதனால் 94 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டியது வரும்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும், சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அதன் பிறகு ஐபிஎல் தொடர். அதனால்தான் இம்முறை போட்டியை 74-ல் இருந்து 84 ஆக அதிகரிப்பதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்யப்பட்டது, ஆனால் பொருத்தமான நேரத்தில் இதற்கான முடிவை எடுப்போம். எனினும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான உடனடி திட்டம் இல்லை” என்றார்.