வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடம்
புதுடெல்லி
இந்திய யு-19 கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 50 ஓவர் பயிற்சி ஆட்டம், 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 50 ஓவர் பயிற்சி ஆட்டம் வரும் 24-ம் தேதி லவுபரோ பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய யு-19 அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ரஞ்சி கோப்பையில் மும்பையிலும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவிலும் விளையாடி வரும் 17 வயதான தொடக்க வீரரான ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியும் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க பேட்ஸ்மேனான சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். இதுவரை அவர், முதல்தர கிரிக்கெட்டில் 5 ஆட்டங்களும், லிஸ்ட் ஏ விளையாட்டில் 6 ஆட்டங்களிலும் பிஹார் அணிக்காக விளையாடி உள்ளார்.
கடந்த ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சூர்யவன்ஷி சதம் விளாசி அசத்தியிருந்தார். இதைத் தொடர்ந்தே அவர், மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கவனம் செலுத்தத் தொடங்கியது. தற்போது இந்திய யு 19 அணிக்கும் தேர்வாகி உள்ளார்.
ஆயுஷ் மாத்ரே இதுவரை முதல்தர கிரிக்கெட்டில் 9 ஆட்டங்களிலும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களிலும் விளையாடி 962 ரன்கள் சேர்த்துள்ளார். மும்பையை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிக்யான் குண்டு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த லெக் ஸ்பின்னரான முகமது எனானுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய யு 19 அணிக்கு எதிரான தொடரில் 16 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார்.
இந்தியா யு-19 அணி:
ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மவுல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சவுஹான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது எனான், ஆதித்யா ராணா, அன்மோல்ஜீத் சிங்.
மாற்று வீரர்கள்: நமன் புஷ்பக், தீபேஷ், வேதாந்த் திரிவேதி, விகல்ப் திவாரி, அலங்கிரித் ரபோல்.