தோஹா
பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும், தானும் ஒருபோதும் நண்பர்களாக இருந்தது இல்லை என இந்திய ஈட்டி எறிதல் நட்சத்தி வீரரான நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
எட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா வரும் 24-ம் தேதி பெங்களூருவில் நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தார். இந்தத் தொடரில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொள்வதை உறுதியும் செய்திருந்தனர். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார். அவர், அழைப்பு விடுத்த அடுத்த சில நாட்களில்தான் பல்ஹாமில் தீவிரதாக்குதல் நடைபெற்றது. இதனால் நீரஜ் சோப்ராவையும், அவரது குடும்பத்தையும் சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் தோஹாவில் நடைபெற உள்ள டைமண்ட் லீக்கில் பங்கேற்க சென்று நீரஜ் சோப்ரா கூறியதாவது:
முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன், எனக்கு நதீமுடன் மிகவும் வலுவான உறவு இல்லை, நாங்கள் ஒருபோதும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததில்லை. ஆனால் யாராவது என்னிடம் மரியாதையுடன் பேசினால், நானும் மரியாதையுடன் நடந்துகொள்வேன்.
ஒரு தடகள வீரராக நாங்கள் பேச வேண்டும், உலகம் முழுவதிலும் தடகள சமூகத்தைச் சேர்ந்த சில நல்ல நண்பர்கள் எனக்கு உள்ளனர், ஈட்டி எறிதலில் மட்டுமல்ல, பிற விளையாட்டுகளிலும் கூட நண்பர்கள் இருக்கிறார்கள். யாராவது என்னிடம் மரியாதையுடன் பேசினால், நானும் அவரிடம் மரியாதையாக பேசுவேன். ஈட்டி எறிதல் ஒரு மிகச் சிறிய சமூகம், எல்லோரும் தங்கள் நாட்டிற்காக போட்டியிடுகிறார்கள், எல்லோரும் தங்கள் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த விரும்புகிறார்கள்.
இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.