ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் வம்சாவளி வீரரான வேகப்பந்து வீச்சாளர் ஜைனுல்லா இஹ்சானுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றிருந்த வங்கதேச அணி, பாதுகாப்பு காரணங்களை கூறி திடீரென விலகியது. இதையடுத்து அந்த அணிக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஸ்காட்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டனாக ரிச்சி பெரிங்டன் நியமிக்கப்பட்டுளளார். கடந்த 2024-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய 11 வீரர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த வம்சாவளி வீரரான வேகப்பந்து வீச்சாளர் ஜைனுல்லா இஹ்சான் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோன்று பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சஃப்யான் ஷெரீபுக்கும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து இடம் பெற்றுள்ள ‘சி’ பிரிவில் இத்தாலி, மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
அணி விவரம்:
ரிச்சி பெரிங்டன் (கேப்டன்), டாம் புரூஸ், மேத்யூ கிராஸ், பிராட்லி கியூரி, ஆலிவர் டேவிட்சன், கிறிஸ் கிரீவ்ஸ், ஜைனுல்லா இஹ்சான், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், ஃபின்லே மெக்ரீத், பிரண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சஃப்யான் ஷெரீஃப், மார்க் வாட், பிராட்லி வீல்.

