245 அடிச்சும் வேஸ்டா போச்சே… ஷ்ரேயாஸ் புலம்பல்
ஐதராபாத்: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் 246 ரன் என்ற இமாலய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவின் சரவெடி அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன் குவித்தது. முன்னணி வீரர்கள் ஆர்யா 36 ரன் (13 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங் 42 ரன் (23 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 82 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), நெஹல் வதேரா 27 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். ஷஷாங்க் சிங் 2, மேக்ஸ்வெல் 3 ரன்னில் வெளியேறினர்.

ஷமி வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களைப் பறக்கவிட்ட ஸ்டாய்னிஸ் 34 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), மார்கோ யான்சென் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 4, இஷான் மலிங்கா (அறிமுகம்) 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, மிக மிகக் கடினமான இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு… டிராவிஸ் ஹெட் – அபிஷேக் ஷர்மா இணை ருத்ரதாண்டவமாடி அசுர வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியது. குறிப்பாக, அபிஷேக் ஷர்மா சந்தித்த பந்துகளை எல்லாம் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு பஞ்சாப் பந்துவீசாளர்களை பதற்றத்தில் ஆழ்த்தினார்.
அபிஷேக் 19 பந்தில் அரை சதம் அடிக்க, மறுமுனையில் ஹெட் 31 பந்தில் 50 ரன்னை எட்டினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 171 ரன் சேர்த்து வெற்றிக்கு பாதை அமைத்தது. ஹெட் 66 ரன் (37 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் மேக்ஸ்வெல் வசம் பிடிபட்டார்.
அதன் பிறகும் கொஞ்சமும் சளைக்காமல் மட்டையை தாறுமாறாக சுழற்றிய அபிஷேக் 40 பந்தில் சதத்தை நிறைவு செய்து அமர்க்களப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அபிஷேக் 141 ரன் (55 பந்து, 14 பவுண்டரி, 10 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

எனினும், பஞ்சாப் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளையும் அபிஷேக்கின் அதிரடி ஆட்டம் ஒட்டுமொத்தமாக அடைத்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நம்ப முடியாத வெற்றியை வசப்படுத்தியது.கிளாஸன் 21 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), இஷான் கிஷன் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 245 ரன் அடித்தும் வெற்றியை கோட்டைவிட்டதால் பஞ்சாப் கிங்ஸ் அணியினர் ஏமாற்றத்தில் மூழ்க… ஆரஞ்சு ஆர்மியின் ஆரவாரத்தில் ராஜிவ் காந்தி அரங்கம் அதிர்ந்து அடங்கியது. அந்த 10.0 ரிக்டர் அதிர்வுக்கு காரணமாக இருந்த அபிஷேக் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.