ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று முன்தினம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
நாளை (மார்ச் 1-ம் தேதி) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, இரு முறை சாம்பியனான மே.இ.தீவுகளை எதிர்கொள்கிறது. இது இரு அணிகளுக்குமே சூப்பர் 8 சுற்றில் கடைசி ஆட்டம் ஆகும்.
இந்த சுற்றில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 2 புள்ளிகளை பெற்றுள்ளன. இதனால் கொல்கத்தா போட்டியில் வெற்றியை வசப்படுத்தும் அணியே அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
மே.இ.தீவுகள் அணி முற்றிலும் மாறுபட்ட சவால்களை வழங்கும். அவர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களின் பேட்ஸ்மேன்கள் சிறந்த ஃபார்மில் உள்ளனர்.
அவர்களின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் எதிரணியின் தவறுகளை பயன்படுத்திக் கொண்டு சரியான நேரத்தில் தாக்குதல் ஆட்டம் தொடுப்பார்கள்.
மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவுக்கு ஒரு நல்ல திட்டம் தேவைப்படும். அவர்களின் பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலிருந்தே அடிக்கத் தொடங்குவார்கள். அவர்கள், காத்திருக்க மாட்டார்கள். இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.
