ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து, அறிமுக அணியான இத்தாலியுடன் மோதியது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. ஆல்ரவுண்டரான வில் ஜேக்ஸ் 22 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசினார். பில் சால்ட் 28, ஜாஸ் பட்லர் 3, ஜேக்கப் பெத்தேல் 23, டாம் பேன்டன் 30, கேப்டன் ஹாரி புரூக் 14, சேம் கரண் 25, ஜேமி ஓவர்டன் 15 ரன்கள் சேர்த்தனர். இத்தாலி அணி சார்பில் கிராண்ட் ஸ்டூவர்ட், கிரிஷான் கலுகமகே ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
203 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இத்தாலி அணி ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை பறிகொடுத்தது. அந்தோணி மோஸ்கா, ஜேஜே ஸ்மட்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினர். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹாரி மானெண்டி 12 ரன்களில் ஜேமி ஓவர்டன் பந்தில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு ஜஸ்டின் மோஸ்காவுடன் இணைந்த பென் மானெண்டி இங்கிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தார். அவரது அதிரடியால் இத்தாலி அணி 11.3 ஓவர்களில் 100 ரன்களை குவித்தது. மட்டையை சுழற்றிய பென் மானெண்டி 25 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் விளாசிய நிலையில் வில் ஜேக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு பென் மானெண்டி, ஜஸ்டின் மோஸ்கா ஜோடி 8 ஓவர்களில் 92 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய கிராண்ட் ஸ்டூவர்ட்டும் மட்டையை சுழற்றினார். மறுபுறம் சீராக ரன்கள் சேர்த்த ஜஸ்டின் மோஸ்கா 34 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆதில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய மார்கஸ் காம்போபியானோ 2, கியான்-பியரோ மீட் ரன் ஏதும் எடுக்காத நிலையில் சேம் கரண் பந்தில் நடையை கட்டினர். கடைசி 3 ஓவர்களில் இத்தாலி அணியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவையாக இருந்தது. ஆதில் ரஷித் வீசிய 18-வது ஓவரில் கிராண்ட் ஸ்டூவர்ட் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். இந்த ஓவரில் 21 ரன்கள் விளாசப்பட்டது. இதையடுத்து 12 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.
சேம் கரண் வீசிய அடுத்த ஓவரில் கிராண்ட் ஸ்டூவர்ட் ஆட்டமிழந்தார். அவர், 23 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் விளாசினார். இந்த ஓவரில் சேம் கரண் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க இங்கிலாந்து அணி பெருமூச்சு விட்டது. கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஜேமி ஓவர்டன் இந்த ஓவரை மெய்டனாக வீசியதுடன் ஜஸ்பிரீத் சிங் (12), அலி ஹசன் (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார்.
முடிவில் 20 ஓவர்களில் இத்தாலி அணி 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சேம் கரண், ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி லீக் சுற்றை 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துடன் நிறைவு செய்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதே பிரிவில் ஏற்கெனவே மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருந்தது.

