ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள எஸ்எஸ்சி மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான், நெதர்லாந்துடன் மோதியது. முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி அச்சமின்றி செயல்பட்டு ரன்கள் குவித்தது.
தொடக்க வீரரான மேக்ஸ் ஓ’டவுட் 5 ரன்களில் சல்மான் மிர்ஸா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மைக்கேல் லெவிட் 15 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் விளாசி முகமது நவாஷ் பந்தில் ஆட்டமிழந்தார். பவர்பிளேவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 50 ரன்கள் விளாசியது.
இதையடுத்து களமிறங்கிய காலின் ஆக்கர்மான் 14 பந்துகளி 20 ரன்கள் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் போல்டானார். 10 ஓவர்கள் நெதர்லாந்து அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது. பாஸ் டி லீ, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் சீராக ரன்கள் சேர்க்க நெதர்லாந்து அணி 15 ஓவர்களில் 123 ரன்களை சேர்த்து வலுவாக இருந்தது.
இதனால் நெதர்லாந்து அணி 170 ரன்கள் வரை குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பகா செயல்பட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினர் ஸ்காட் எட்வர்ட்ஸ் 37, பாஸ் லீ டி 30 ரன்களில் வெளியேறினர். அவர்களை தொடர்ந்து லோகன் வான் பீக் 0, சாக் லயன்-கேஷெட் 9, ரோல்ப் வான்டர் மெர்வி 4, ஆர்யன் தத் 13, பால் வான் மீகிரன் 0 ரன்களில் நடையை கட்ட நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணி தனது கடைசி 6 விக்கெட்களை 20 ரன்களுக்கு கொத்தாக தாரைவார்த்தது. சுழற்பந்து வீச்சாளர்களான அப்ரார் அகமது, சைம் அயூப், முகமது நவாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். பின்வரிசை பேட்ஸ்மேன்களை இடது கை வேகப்பந்து வீச்சாளரான சல்மான் மிராஸ் விரைவில் வெளியேற்றினார்.
அவர், 24 ரன்களை வழங்கி 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 148 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். சையம் ஆயூப் 13 பந்துகளில் 24 ரன்களும், அடுத்து களமிறங்கிய கேப்டன் சல்மான் அலி ஆகா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. 12-வது ஓவரை வீசிய பால் வான் மீகிரன் ஒரு ரன்னை கூட விட்டுக்கொடுக்காமல் 2 விக்கெட்களை வீழ்த்தினார். அவரது பந்து வீச்சில் சாஹிப்சாதா ஃபர்ஹான் 47 ரன்களில் (31 பந்து, 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். உஸ்மான் கான் ரன் ஏதும் எடுக்காமல் போல்டானார்.
ரால்ப் வான்டர் மெர்வி வீசிய அடுத்த ஓவரில் களமிறங்கிய பாபர் அஸம் (15) நடையை கட்டினார். இந்த 3 விக்கெட்களும் 2 ரன்கள் இடைவேளையில் சரிந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய முகமது நவாஷ் 6, ஷதப் கான் 8 ரன்களில் வெளியேறினார். 16.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவையாக இருந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. லோகன் வான் பீக் வீசிய 19-வது ஓவரில் முதல் பந்தில் ஆல்ரவுண்டரான ஃபஹீம் அஷ்ரஃப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்தில் ஃபஹீம் அஷ்ரஃப் லாங் ஆன் திசையில் கொடுத்த கேட்ச்சை மேக்ஸ் ஓ’டவுட் தவறவிட்டார்.
அத்துடன் நெதர்லாந்து அணியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. இந்த ஓவரின் எஞ்சிய பந்துகிள்ல 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை ஃபஹீம் அஷ்ரஃப் விளாச பாகிஸ்தான் அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியது. இந்த ஓவரில் மட்டும் ஃபஹீம் அஷ்ரஃப் 24 ரன்களை குவித்தார்.
பாஸ் டி லீ வீசிய கடைசி ஓவரின் 3-வது பந்தை ஃபஹீம் அஷ்ரஃப் பவுண்டரிக்கு விரட்ட பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஃபஹீம் அஷ்ரஃப் 11 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களும், ஷாகின் ஷா அப்ரீடி 5 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முழுமையாக 2 புள்ளிகளை பெற்றது.

