ஐசிசி ஆடவருக்கான 10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய அணி குறித்த ஓர் பார்வை..
இந்தியா:
நடப்பு சாம்பியனான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது. உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி ஒருபோதும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது இல்லை. மேலும் டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடரை நடத்தும் நாடு இதுவரை கோப்பையை தக்கவைத்ததும் கிடையாது. மேலும் எந்த அணியும் 3 முறை கோப்பயை கைகளில் ஏந்தியது இல்லை. ஆனால் இம்முறை இந்த வரலாற்றை இந்திய அணி மாற்றி எழுதக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2007 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி சமீபத்திய ஐசிசி டி 20 தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது. பேட்டிங் ஆர்டரில் 8-வது வரிசை வரை பேட்ஸ்மேன்கள் இருப்பது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா எந்த வகையிலான பந்துவீச்சையும் வெளுத்து வாங்கக்கூடிய வீரராக திகழ்கிறார். சர்வதேச டி 20 அரங்கில் 38 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 2 சதங்கள், 8 அரை சதங்களுடன் 1,297 ரன்கள் குவித்துள்ளார்.
டி 20 சர்வதேச போட்டிகளில் அவரது ஸ்டிரைக் ரேட் பிரம்மாண்டான வகையில் 194.74 ஆக உள்ளது. இதனால் இம்முறை டி 20 உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக திகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்றே இஷான் கிஷனும் பேட்டிங்கில் மிரட்டக்கூடி வீரராக உருவெடுத்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் அவர், 43 பந்துகளில் 103 ரன்களை விளாசி மிரட்டியிருந்தார். இஷான் கிஷனும், அபிஷேக் சர்மாவும் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடும் திறனை கொண்டிருப்பது டாப் ஆர்டருக்கு பெரிய பலமாக உள்ளது. இவர்களுடன் சஞ்சு சாம்சனும் மட்டையை சுழற்றத் தொடங்கினால் இந்திய அணி அசுர பலம் பெறும்.
சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஷிவம் துபே, ரிங்கு சிங் ஆகியோரும் ஆட்டத்தின் போக்கை தங்களது அதிரடியால் எந்த நேரத்திலும் மாற்றும் திறன் கொண்டவர்கள். காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள திலக் வர்மாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சளைத்தவர் இல்லை. 2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி முதலில் பேட் செய்த ஆட்டங்களில் மிகப்பெரிய அளவில் ரன்களை வேட்டையாடி உள்ளது. அதேவளையில் சமீபகாலமாக 200 ரன்களுக்கு மேலான இலக்கை எளிதாக 15 ஓவர்களுக்குள்ளேயே வெற்றிகரமாக கடந்துள்ளது.
பந்துவீச்சிலும் இந்திய அணி சமநிலையுடன் இருக்கிறது. வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சர்வதேச டி 20 அரங்கில் 100 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி உள்ளனர். அர்ஷ்தீப் சிங் தொடக்க ஓவர்களிலும், பும்ரா இறுதிக்கட்ட ஓவர்களில் நேர்த்தியாக செயல்படக்கூடியவர்கள்.
இவர்களுக்கு உறுதுணையாகவும் 3-வது பிரதான வேகப்பந்து வீச்சாளராகவும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா திகழ்கிறார். இவரும் சர்வதேச டி 20 அரங்கில் 100 விக்கெட்களுக்கு மேல் சாய்த்துள்ளார். மேலும் ஹர்ஷித் ராணாவும் அணியில் இருப்பது கூடுதல் பலம். மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார்.
சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் வருண் சக்ரவர்த்தி நடு ஓவர்களில் மாயா ஜாலங்கள் நிகழ்த்தக்கூடியவர். 36 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 59 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இடதுகை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவும் பலம் சேர்ப்பவராக உள்ளார். 53 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 94 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
எனினும் இவர்கள் இருவரும் சமீபத்தில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வருண் சக்ரவர்த்தியும், குல்தீப் யாதவும் மீண்டுவரக்கூடும்.
3-வது சுழற்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டரான அக்சர் படேல் உள்ளார். அவர், 83 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 4-வது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருக்கும் வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் காயம் அடைந்துள்ளார். 51 விக்கெட்களை கைப்பற்றி உள்ள அவர், முழு உடற்தகுதியை பெறுவாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது. ஒருவேளை அவர், உலகக் கோப்பையை தவறவிட்டால் ரவி பிஷ்னோய்க்கு அதிர்ஷ்டம் கிடைக்கக்கூடும்.

