மும்பை
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதற்காக இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. இதையொட்டி மும்பையில் நேற்று கேப்டன் ஷுப்மன் கில்லும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறும்போது,“ ரோடுஷோக்களை நடத்துவதில் எனக்கு ஒருபோதும் ஆர்வம் இல்லை. நான் ஒரு வீரராக இருந்தபோதும் அது பிடிக்கவில்லை, இப்போது ஒரு பயிற்சியாளராகவும் அதை விரும்பவில்லை.
மக்களின் உயிர்கள் அதைவிட முக்கியம். பெங்களூருவில் நடந்தது துயரமானது, எதிர்காலத்தில் இதுபோன்று எதுவும் நடக்காது என்று நம்புகிறேன். நாம் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். நாம் ஒரு ரோடு ஷோவை நடத்தத் தயாராக இல்லை என்றால், அதைச் செய்திருக்கக் கூடாது” என்றார்.