அகமதாபாத்
அகமதாபாத்தில் நேற்று (ஜூன் 3) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இறுதிப் போட்டியில் பஞசாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
ஐபிஎல் வரலாற்றில் 18 வருடங்களாக ஆர்சிபி அணிக்கு விளையாடி வரும் விராட் கோலி தற்போதுதான் முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைகளில் வருடி உள்ளார். ஆட்டத்தின் கடைசி பந்து வீசப்பட்டதும் மைதானத்தில் விராட் கோலி உணர்ச்சி பெருக்கில் ஆனந்த கண்ணீர் சிந்தியது ரசிகர்களின் மனதை வருடியது.
போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி கூறும்போது,“ இந்த வெற்றியானது, அணிக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கானதும் கூட. நாங்கள் கோப்பையை வெல்ல 18 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதற்காக என்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறேன். இந்த நாள் வரும் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை.
கடைசி பந்து வீசப்பட்டதும் நான் உணர்ச்சிவசப்பட்டேன். டி வில்லியர்ஸ் இந்த அணிக்காக செய்த விஷயங்கள் பெரியவை. இந்த வெற்றி எங்களுக்கானது என்பதுபோல், உங்களுக்கானது என்றும் நான் அவரிடம் கூறியிருந்தேன்.
ஏனெனில் பெங்களூரு அணிக்காக அவர் செய்த விசயங்கள் மிக சிறந்தவை. எங்களுக்காக நிறைய ஆட்ட நாயகன் விருதுகளை அவர் பெற்று தந்திருக்கிறார். அவர் ஓய்வு பெற்று 4 ஆண்டுகளாகி விட்டன.
எனினும் இந்த அணிக்கு, ஒரு நபராக எனக்கு, எங்களுடைய நட்புறவு மற்றும் பெங்களூரு மக்கள் மீது அவர் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அதனால், எங்களுடன் மேடையில் நிற்க அவர் தகுதியானவர்” என்றார்.

