சென்னை
எஸ்எஸ்பிஎல் (சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்) டி 10 டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கோவா ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி பகுதிகளை சேர்ந்த 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.3 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் ஆற்காடு இளவரசர் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, நடிகர் ரவி மோகன், லீக் தலைமை செயல் அதிகாரியும் இயக்குநருமான ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் போட்டிக்கான லட்சினை, கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொடரின் இறுதிப் போட்டியை ஷார்ஜாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு 68 மண்டலங்களில் நடைபெற உள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். வீரர்கள் தேர்வில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
மொத்தம் 300 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் பின்னர் அவர்களை ஏலத்தின் வாயிலாக 12 அணிகளும் தேர்ந்தெடுப்பார்கள். ஏலத்தில் வீரரின் விலை குறைந்தபட்ச தொகை ரூ.1.5 லட்சம் எனவும் அதிகபட்சம் ரூ.3 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.