லாகூர்
வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.கேப்டன் சல்மான் ஆஹா 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசினார்.
ஹசன் நவாஷ் 22 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் ஷதப் கான் 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் விளசினர். முகமது ஹாரிஸ் 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.
வங்கதேச அணி சார்பில் பந்துவீச்சில் ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 202 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக கேப்டன் லிட்டன் தாஸ் 30 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 48 ரன்கள் சேர்த்தார். ஜாகர் அலி 36, தன்ஸித் ஹசன் 31, தவுஹித் ஹிர்டோய் 17 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 3.2 ஓவர்களை வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வேட்டையாடினார்.
ஷதன் கான் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆட்ட நாயகனாக ஷதப் கான் ( பேட்டிங்கில் 48 ரன்கள், பந்துவீச்சில் 2 விக்கெட், பீல்டிங்கில் 2 கேட்ச்) தேர்வானார். 2-வது போட்டி நாளை (மே 30) இதே மைதானத்தில் நடைபெறுகிறது.