Angelo

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் ஓய்வு!

கொழும்பு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார்.

இலங்கை அணி தனது சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17-ம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைதள பதிவில், “இலங்கை அணிக்காக விளையாடியதில் மறக்க முடியாத நினைவுகள் எனக்கு கிடைத்துள்ளது. மிகவும் பிடித்தமான டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியே இலங்கை அணிக்காக நான் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியில் விளையாடுவதற்கு தயாராகவே இருக்கிறேன். இலங்கை டெஸ்ட் அணியில் நிறைய திறமைவாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு இதுவே சரியான தருணம் என கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Angelo

கடந்த 2009-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஏஞ்சலோ மேத்யூஸ் இதுவரை இலங்கை அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,167 ரன்கள் குவித்துள்ளார். குமார் சங்ககாரா (12,400), மஹேலா ஜெயவர்த்தனே (11,814) ஆகியோருக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் மேத்யூஸ் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 44.62. 16 சதங்கள், 45 அரைசதங்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 34 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top