லக்னோ
விக்கெட் வீழ்த்திய பின்னர் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ராதிக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வி அடைந்தது. 206 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 20 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
அதிரடியாக விளையாடிய அவர், திக்வேஷ் ராதி வீசிய சுழலில் எக்ஸ்டிரா கவர் திசையில் ஷர்துல் தாக்குரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மாவை ஆட்டமிழக்க செய்த மகிழ்ச்சியை திக்வேஷ் ராதி தனது வழக்கமான ‘நோட்புக் செலிபிரேஷன்’ பாணியில் கொண்டாடினார். இதனால் களத்தில் திக்வேஷ் ராதிக்கும், அபிஷேக் சர்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. களநடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் திக்வேஷ் ராதி, நோட்புக் செலிபிரேஷன் சர்ச்சையில் சிக்குவது இது 3-வது முறையாகும். ஏற்கெனவே அவர், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தின் போதும் நோட்புக் செலிபிரேஷனில் ஈடுபட்டிருந்தார். இதற்கு அவருக்கு 3 தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தது.
தற்போதைய செயலால் திக்வேஷ் ராதிக்கு மேலும் 2 தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டது. மொத்தம் 5 தகுதியிழப்பு புள்ளிகளை பெற்றதால்
ஐபிஎல் நன்னடத்தை விதிகளின்படி திக்வேஷ் ராதிக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அபிஷேக் சர்மாவுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (22-ம் தேதி) குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் திக்வேஷ் ராதி களமிறங்க முடியாது. 25 வயதான திக்வேஷ் ராதி நடப்பு தொடரில் 12 ஆட்டங்களில் விளையாடி 14 விக்கெட்களை கைப்பற்றியுள்ள உள்ளார்.