சென்னை
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச ஓபன் ஃபிடே ரேட்டிங் செஸ் தொடர் நேற்று (மே 15-ம் தேதி) தொடங்கியது. எஸ்ஆர்எம் கல்லூரியானது கோல்டன் நைட்ஸ் செஸ் அகாடமி மற்றும் மாஸ்டர் மைண்ட் செஸ் அகாடமி ஆகியவற்றுடன் இணைந்து இந்த தொடரை நடத்துகிறது.
வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 8 மாநிலங்களைச் சேர்ந்த 446 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் சர்வதேச மாஸ்டர் வீரர் ஒருவர், 226 சர்வதேச ஃபிடே ரேட்டிங் வீரர்களும் அடங்குவர். இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.5 லட்சம் ஆகும். மேலும் 80 பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.
போட்டியை எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் கே.குணசேகரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளையாட்டு இயக்குநர் ஆர்.மோகனகிருஷ்ணன், எம்.செந்தில் குமார், ஜெயசிங் ஆல்பர்ட் சந்திரசேகர், என்.சி. ஜீசஸ் ராஜ்குமார், எம்.கோகுல், சி.நடராஜன், எஸ். கணேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.