கொல்கத்தா
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சிஎஸ்கேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 11 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் கொல்கத்தா அணி உள்ளது.
இந்த 3 ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் 17 புள்ளிகளையே பெறும். இது நிகழ்ந்தாலும் அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் முடிவுகள் மற்றும் நிகர ரன் விகிதம் ஆகியவற்றை பொறுத்தே கொல்கத்தா அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு தெரியவரும்.
சிஎஸ்கேவுக்கு எதிராக இன்றைய ஆட்டத்தை சொந்த மண்ணில் விளையாடும் கொல்கத்தா அணி தனது கடைசி இரு லீக் ஆட்டங்களையும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணில் விளையாடுகிறது.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது. அந்த அணி 11 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 9 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 214 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டிருந்தது.
அந்த ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளில், 94 ரன்களையும் ரவீந்திர ஜடேஜா 45 பந்துகளில், 77 ரன்களையும் விளாசியிருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்து தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு கேப்டனாக தோனி பொறுப்பேற்றிருந்தார்.
ஏனெனில் இந்த ஆட்டத்தில் 8 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்த தோனி, யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரின் 3-வது பந்தில் ஆட்டமிழந்திருந்தார். ஈடன் கார்டன் மைதானம் தோனிக்கு பல்வேறு பசுமையான தருணங்களை கொடுத்துள்ளது. இதனால் அவரிடம் இருந்து உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும்