மும்பை
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியா தனது முதல் தொடரை இங்கிலாந்து அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு மீது இப்போதே எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறும்போது, “ சாய் சுதர்சனை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டுக்கான வீரராக நான் பார்க்கிறேன். அவர், தரமான பேட்ஸ்மேனாக தெரிகிறார். இதனால் எனது பார்வை அவர் மீது இருக்கிறது.
இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கும் சாய் சுதர்சன் இங்கிலாந்து சூழ்நிலைகளை அறிந்தவர். அவருடைய தொழில்நுட்பம், விளையாடும் விதம் ஆகியவற்றால் வெளியே இருந்து இந்திய டெஸ்ட் அணிக்குள் நுழைய காத்திருக்கும் வீரர்களில் தேர்வு செய்யக்கூடிய முதல் நபராக இருப்பார் என கருதுகிறேன்” என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 50.40 சராசரியுடன் 5 அரை சதங்கள் விளாசி 504 ரன்கள் வேட்டையாடி உள்ளார்.