புதுடெல்லி
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்பரல் 27) டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் சேர்த்தனர். அபிஷேக் போரெல் 28, டு பிளெஸ்ஸிஸ் 22 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி அணி சார்பில் புவேன்ஷ்வர் குமார் 3, ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
163 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புப்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிருணல் பாண்டியா 47 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன 73 ரன்களும், விராட் கோலி 47 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன 51 ரன்களும் விளாசினர். டிம் டேவிட் 5 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார்.
ஆர்சிபி அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறும்போது, “ நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய ஆடுகளம் சற்று கடினமாக இருந்தது, ஆனால் பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் அது தளர்ந்தது. நாங்கள் சில கேட்ச்களை தவறவிட்டோம், அந்த கேட்ச்களை எடுத்திருக்க வேண்டும்.
நோக்கம் ஒன்றுதான், ஆனால் ஆடுகளம் இருவிதமான வேகத்தில் செயல்பட்டது. பனி வந்த பிறகு பேட்டிங் செய்வது எளிதாகிவிட்டது, நாங்கள் வித்தியாசமாக எதையும் செய்திருக்க முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
நாங்கள் விக்கெட்களை இழந்துகொண்டே இருந்தோம். யாரேனும் ஒரு பேட்ஸ்மேன் மிடில் ஆர்டரில் சிறிது நேரம் செலவழித்திருந்தால், அவர் உத்வேகத்தை அதிகரித்திருக்கலாம், அதன் வாயிலாக 10-15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம்” என்றார்.