சென்னை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்பரல் 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 42 ரன்களும், ஆயுண் மகத்ரே 19 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் விளாசினர். தீபக் ஹூடா 22, ரவீந்திர ஜடேஜா 21 ரன்கள் சேர்த்தனர். தோனி 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
155 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவை ஹைதராபாத் அணி வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 22 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன 32 ரன்களும் விளாசினர்.
சிஎஸ்கேவுக்கு இது 7வது தோல்வியாக அமைந்தது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் தொடர்கிறது. இந்த தோல்வியால் சிஎஸ்கே அணி ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறும்போது, “நாங்கள் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தோம். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்குக்கு சாதகமாகத்தான் ஆடுகளம் இருந்தது. இந்த ஆடுகளத்தில் 150 என்பது நியாயமான ஸ்கோர் இல்லை. 15-20 ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம்.
டெவால்ட் ப்ரெவிஸ் மாதிரியான வீரர் எங்களுக்கு தேவைப்பட்டார். மிடில் ஓவர்களில் ஒரு 15 ரன்களை அதிகமாக எடுக்க வேண்டும். நாங்கள் அதில்தான் சறுக்கிக் கொண்டிருந்தோம். அதை சரி செய்ய எங்களுக்கு ஒரு வீரர் தேவைப்பட்டார். டெவால்ட் ப்ரெவிஸ் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடியிருக்கிறார்.
இந்த மாதிரியான பெரிய தொடர்களில் அணியில் ஒன்றிரண்டு பிரச்சனை இருந்தால் அதை தீர்க்க முயலலாம். ஆனால் பெரும்பாலான வீரர்கள் சரியாக செயல்படாதபட்சத்தில் அது சிரமம்தான். அதனால்தான் அணியில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது.
பிரச்சனைகளோடு அப்படியே தொடர முடியாது. டி20 போட்டிகள் நிறையவே மாறிவிட்டது. எல்லா போட்டிகளிலும் 180-200 ரன்களை எடுக்க சொல்லவில்லை. ஆனால், சூழலை உணர்ந்து அதற்கேற்ப ஒரு நல்ல ஸ்கோரை பேட்டிங்கில் எடுக்க வேண்டும்”என்றார்.