லக்னோ
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லக்னோ அணியை 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்களுக்கு மட்டுப்படுத்தினர் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள். அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 33 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் விளாசினர்.
நிகோலஸ் பூரன் 5 பந்துகளில் 9 ரன்களும், அப்துல் சமத்8 பந்துகளிலும் 2 ரன்களும் சேர்த்து வெளியேறினர். இதன் பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் 15 பந்துகளில், 14 ரன்களும் ஆயுஷ் பதோனி 21 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர். ரிஷப் பந்த் கடைசி 2 பந்துகள் மீதமிருக்கையில் களமிறங்கி 2 பந்துகளிலும் ரன்கள் ஏதும் சேர்க்காமல் போல்டானார். டெல்லி அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
160 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான அபிஷேக் போரெல் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான கருண் நாயர் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர்கள் இருவரும் மார்க்ரம் பந்தில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் கேப்டன் அக்சர் படேல் 20 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டெல்லி அணிக்கு 6-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் தொடர்கிறது. டெல்லி அணி 2009, 2012, 2020, 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிகளிலும் முதல் 8 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றிருந்தது. இந்த அனைத்து சீசன்களிலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இந்த வகையில் இந்த சீசனிலும் 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளை குவித்துள்ளதால் இம்முறையும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றில் கால்பதிப்பது உறுதியென அந்த அணியின் ரசிகர்கள் இப்போதே துள்ளிக்குதிக்க ஆரம்பித்துவிட்டனர்.