லக்னோ
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லக்னோ அணியை 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்களுக்கு மட்டுப்படுத்தினர் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள். அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 33 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் விளாசினர்.
நிகோலஸ் பூரன் 5 பந்துகளில் 9 ரன்களும், அப்துல் சமத்8 பந்துகளிலும் 2 ரன்களும் சேர்த்து வெளியேறினர். இதன் பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் 15 பந்துகளில், 14 ரன்களும் ஆயுஷ் பதோனி 21 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர். ரிஷப் பந்த் கடைசி 2 பந்துகள் மீதமிருக்கையில் களமிறங்கி 2 பந்துகளிலும் ரன்கள் ஏதும் சேர்க்காமல் போல்டானார். டெல்லி அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
160 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான அபிஷேக் போரெல் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான கருண் நாயர் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர்கள் இருவரும் மார்க்ரம் பந்தில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் கேப்டன் அக்சர் படேல் 20 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டெல்லி அணிக்கு 6-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் தொடர்கிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
போட்டி முடிவடைந்ததும் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது:
நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். லக்னோ ஆடுகளத்தில் டாஸ் பெரிய பங்கு வகிக்கிறது. யார் முதலில் பந்து வீசுகிறார்களோ, அவர்களுக்கு ஆடுகளத்தில் இருந்து நிறைய உதவிகள் கிடைக்கும். நாங்கள் அங்கேயே இருந்து பின்வாங்க வேண்டியது இருந்தது. இது எப்போதும் லக்னோவில் நடக்கும், இரண்டாவது இன்னிங்ஸில், ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருக்கும், பந்துகள் மட்டைக்கு சரியாக வரும். இப்படித்தான் லக்னோவில் நடைபெறும் ஆட்டங்கள் செல்கின்றன. இதற்காக ஆடுகளங்கள் குறித்து புகார் செய்ய முடியாது.
ஆம், டாஸ் இங்கே ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது, ஆனால் ஒரு அணியாக, நாங்கள் சாக்கு போக்குகளை தேடவில்லை. இதனால்தான் ஆயுஷ் பதோனியை நாங்கள் இம்பாக் பிளேயர் விதியின் கீழ் களமிறங்குகிறோம். மயங்க் யாதவுக்கு போட்டிக்கான நேரத்தை வழங்க வேண்டும். அவர், இப்போதுதான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து வந்துள்ளார். போட்டிக்கு தகுந்தவாறு மயங்க் யாதவ் தன்னை தயார்படுத்தி வருகிறார். இதுபோன்ற ஆடுகளத்தை பயன்படுத்திக் கொள்ளவே அப்துல் சமத்தை முன்கூட்டி களமிறக்கினோம். ஆனால் அவரும், டேவிட் மில்லரும் ஆடுகளத்தின் தன்மையாமல் சிக்கிக் கொண்டனர்.
இதுபோன்ற விஷயங்களை சரிசெய்வதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் மேலும் சிறந்த அணிச்சேர்க்கையை முயற்சித்து முன்னேறிச் செல்ல வேண்டும். இப்போதைக்கு அடுத்த ஆட்டங்கள் குறித்து யோசிக்கவில்லை. இப்போதுதான் இந்த ஆட்டத்தை முடித்துள்ளோம். இதன் பின்னர் ஒன்றிணைந்து, கட்டமைப்பில் கவனம் செலுத்துவோம். அடுத்த ஆட்டத்தை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்வோம்.
இவ்வாறு ரிஷப் பந்த் கூறினார்.