ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 8) நடைபெற்ற ஆட்டத்தில்
நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
மிட்செல் மார்ஷ் 48 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 81 ரன்ளும், நிகோலஸ் பூரன் 36 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்களும் எய்டன் மார்க்ரம் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் விளாசினர்.
239 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகட்சமாக அஜிங்க்ய ரஹானே 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் விளாசினர்.
இறுதி கட்டத்தில் போராடிய ரிங்கு சிங் 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் விளாசிய போதிலும் கொல்கத்தா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
போட்டி முடிவடைந்ததும் கேகேஆர் கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறும்போது,” இது மிகவும் நெருக்கமான ஆட்டம். நான் டாஸில் சொன்னது போல், 40 ஓவர்கள் முழுவதும் ஆடுகளம் நன்றாக இருந்தது. நாங்கள் எங்கள் சிறந்ததைக் கொடுத்தோம், இது ஒரு சிறந்த ஆட்டம், இறுதியில் நாங்கள் 4 ரன்கள் குறைவாக இருந்தோம். 230 ரன்களுக்கு மேல் துரத்தும் போது சேஸிங்கில் விக்கெட்டுகளை இழக்க நேரிடும். பேட்டிங் செய்ய சிறந்த ஆடுகளங்ளில் இதுவும் ஒன்று. பேட்ஸ்மேன்கள் நிலை பெற சிறிது நேரம் எடுக்க வேண்டியிருந்தது.
எங்களிடம் உள்ள பந்துவீச்சு தாக்குதல், எங்கள் மிடில் ஓவர்களை நன்றாக கட்டுப்படுத்துகிறது. சுனில் நரைன் பந்துவீச்சில் தடுமாறினார். வழக்கமாக மிடில் ஓவர்களில் சுனில் ரைன், வருண் சக்கரவர்த்தி ஆதிக்கம் செலுத்துவார்கள், ஆனால் இன்று பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருந்தது” என்றார்.