பெங்களூரு
ஐபிஎல் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்க உள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி). இந்த சீசனில் பல்வேறு சாதனைகளை உடைக்க காத்திருக்கிறார் ஆர்சிபி நட்சத்திரம் விராட் கோலி.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்த சாதனை டேவிட் வார்னர் வசம் உள்ளது. அவர், இதுவரை 66 அரை சதங்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை காலி செய்ய விராட் கோலிக்கு மேற்கொண்டு 8 அரை சதங்களே தேவையாக உள்ளது.
இதனால் வார்னர் சாதனையை இந்த சீசனில் விராட் கோலி தகர்க்கக்கூடும். இதுவரை விராட் கோலி 55 முறை 50+ ரன்கள் எடுத்துள்ளார். அவுட்பீல்டு திசையில் அதிக கேட்ச்கள் செய்த சாதனை வசம் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸிடம் உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அவர், 118 கேட்ச் எடுத்துள்ளார். இந்த சாதனையை கடக்க விராட் கோலிக்கு மேற்கொண்டு 5 கேட்ச்களே தேவையாக உள்ளது. கடந்த சீசனில் மட்டும் விராட் கோலி 8 கேட்ச்கள் எடுத்திருந்தார்.
ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 705 பவுண்டரிகள், 272 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த இரண்டின் கூட்டு எண்ணிக்கை ஆயிரத்தை தொடுவதற்கு மேற்கொண்டு 23 (பவுண்டரிகள் + சிக்ஸர்கள்) தேவையாக இருக்கிறது.
இந்த சீசனில் அவர், இதை நெருங்கும் பட்சத்தில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் எண்ணிக்கையில் ஆயிரத்தை தொட்ட முதல் வீரர் என்ற மெகா சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
மேலும் டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல் சாதனையை படைப்பதற்கு விராட் கோலிக்கு மேற்கொண்டு 293 ரன்களே தேவையாக உள்ளது. இப்படி விராட் கோலி படைக்க இருக்கும் சாதனைகள் நீண்டு கொண்டே போகிறது.
‘இ சாலே கப் நம்தே’ என்ற கோஷம் நிறைவேறுகிறதோ இல்லையோ, விராட் கோலியின் சாதனைகளால் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.