ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஐபிஎல் வரலாற்றில் 13 வயதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இளையவரான வைபவ் சூர்யவன்ஷியின் சிக்சர் அடிக்கும் திறனை பாராட்டினார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, சூர்யவன்ஷி ரூ.1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் தேர்வு செய்யப்பட்டார். 2011 மார்ச் 27 அன்று பீகாரில் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி 2024 ஜனவரியில் 12 வயது 284 நாட்களில் பீகாருக்காக தனது முதல் தர கிரிக்கெட்டை விளையாட தொடங்கினார்.
கடந்த ஆண்டு, சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியஅணியில் அவர் 58 பந்துகளில் சதம் அடித்தார். அவர் பற்றி கேப்டன் சஞ்சுசாம்சன் கூறுகையில்,’என்னைப் பொறுத்தவரை, அறிவுரை சொல்வதை விட, நான் முதலில் கவனிக்க விரும்புகிறேன்.
ஒரு இளைஞன் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறான், அவனுக்கு என்ன பிடிக்கிறது, என்னிடமிருந்து அவருக்கு என்ன ஆதரவு தேவை, என்பது பற்றி ஆராய்ந்து வருகிறேன். வைபவ் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
அகாடமியில் மைதானத்திற்கு வெளியே அவர் சிக்ஸர்களை அடித்தார். அவருடைய பவர்-ஹிட்டிங் பற்றி மக்கள் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தனர். அவரைப் பற்றி நீங்கள் வேறு என்ன கேட்க முடியும்? அவருக்கு ஒரு மூத்த சகோதரனைப் போல நான் செயல்படுவேன்’ என்றார்.